<p><b>கருத்தடை ஆபரேஷன் செய்த பெண்ணுக்கு மீண்டும் குழந்தை பிறந்ததால் ரூபாய் 60 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது</b></p><p><br></p><p>தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா சுப்பிரமணியன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.&nbsp;</p><p><br></p><p>அந்த மனுவில் அவர், "தனது மனைவிக்கு கருத்தடை சிகிச்சை முறையாக செய்யாத தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குடும்ப நல மருத்துவ அலுவலர் உரிய இழப்பீடை வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.</p><p><br></p><p>இந்த மனு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் பிறப்பித்த உத்தரவில், "மனுதாரருக்கும் அவரது மனைவிக்கும் 2 குழந்தைகள் உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடும்ப நல அலுவலர் அளித்த அறிவுறுத்தலின் பேரில், கடந்த 2018 ஆம் ஆண்டு மனுதாரரின் மனைவி நிரந்தர கருத்தடை சிகிச்சையை செய்துள்ளார்.</p><p><br></p><p>இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின்பு மனுதாரரின் மனைவி மீண்டும் கருவுற்ற நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.</p><p><br></p><p>தமிழக அரசின் அரசாணைப்படி, கருத்தடை சிகிச்சை தோல்வியுறும் போது, இழப்பீடாக 60 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். ஆகவே தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குடும்ப நல அலுவலர் 2 வாரங்களுக்குள் ரூ. 60 ஆயிரம் ரூபாயை மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.</p>