<p><b>பொதுமக்கள் நில அளவை செய்ய கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல் இணைய வழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என&nbsp; தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.</b></p><p><br></p><p>நிலஉரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பம் சமர்பித்து வந்த நிலையில், வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல்,&nbsp;<a href="https://tamilnilam.tn.gov.in/citizen" target="_blank">https://tamilnilam.tn.gov.in/citizen</a> என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை&nbsp; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 20.11.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.</p><p><br></p><p>இந்த புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நிலஅளவை செய்ய எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும் நில அளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், Citizen Portal மூலமாக இணைய வழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.</p><p><br></p><p>தற்போது இந்த சேவையினை தமிழ்நாடு முழுவதும் அனைத்து பொதுசேவை மையங்கள் (இ-சேவை) மூலமாகவும் விண்ணப்பிக்கும் வகையில் இவ்வசதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. நில உரிமைதாரர்கள் தங்களது நிலங்களை அளவை செய்ய, பொது சேவை மையங்களை அணுகி, நில அளவைக்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்க இயலும்.</p><p><br></p><p>நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், நிலஅளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நிலஅளவர் கையொப்பமிட்ட&nbsp; &nbsp;அறிக்கை / வரைபடம்&nbsp; நில அளவரால் பதிவேற்றம் செய்யப்பட்டு, மனுதாரர்&nbsp;<a href="https://eservices.tn.gov.in/" target="_blank">https://eservices.tn.gov.in/</a> என்ற இணையவழிச் சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பொதுமக்கள் அனைவரும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.</p>