<p><b>சாத்தான்குளம் அருகே அலைபாயுதே திரைப்பட பாணியில் பிளஸ் 1 மாணவர்கள் திருமணம் முடித்து வாழ்ந்த நிலையில், ஆறு மாதத்திற்கு பிறகு வெளியே தெரிந்ததால் மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக மாணவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.</b></p><p><br></p><p>தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே பேய்குளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இதே பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவனும் 16 வயது மாணவியும் +1 படித்து வருகின்றனர். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டுள்ளது. ஒரே பள்ளியில் படித்து வந்ததால் தினமும் காதலை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த மே மாதம் காதல் ஜோடியினர் பெற்றோருக்கு தெரியாமல் நண்பர்கள் உதவியுடன் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். தொடர்ந்து வழக்கம்போல பள்ளிக்குச் சென்று வந்துள்ளனர்.</p><p><br></p><p>இந்த நிலையில், நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட மாணவி மீது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டு விசாரித்துள்ளனர். அப்போது பிளஸ் 1 மாணவனை திருமணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இது குறித்து மாணவியின் பெற்றோர் சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து ஆய்வாளர் நாககுமாரி விசாரணை நடத்தி மாணவன் மீது வழக்கு பதிவு செய்தார். மாணவியை மீட்டு தூத்துக்குடியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள விவகாரம் தெரிய வந்ததும் மாணவன் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.</p><p><br></p><p>அலைபாயுதே திரைப்படப் பாணியில் மாணவரும் மாணவியும் திருமணம் முடித்துக் கொண்ட சம்பவம் சாத்தான்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p><br></p><p>செல்போனால் ஏற்படும் சமூக வலைதள மோகத்தில் பள்ளிப்பருவத்தில் காதலில் விழுந்து மாணவ மாணவியர் வாழ்க்கையை தொலைக்காமல் இருக்க பள்ளிகளில் கல்வித் துறையினர் விழிப்புணர்வு மற்றும் கவுன்சிலிங் நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துள்ளனர்.</p>