<p><b>தூத்துக்குடி - பாளையங்கோட்டை சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இது பள்ளியில் மட்டுமல்லாமல் டியூசனுக்கு செல்லும் வழியிலும் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.</b><br></p><p>இந்த நிலையில், நேற்று முன்தினம் ( வெள்ளிக்கிழமை )&nbsp; இரவில் டியூசன் முடிந்து வரும் வழியில் அவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து 2 மாணவர்களும், தங்களது நண்பர்களான சக மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என 12 பேரை அழைத்துக் கொண்டு இருதரப்பாக மோதிக்கொண்டனர். இதில் 12 ஆம் வகுப்பு மாணவர்களும் தாக்கப்பட்டனர். அவர்கள் 2 பேருக்கும் வாளால் வெட்டு விழுந்தது. காயம் அடைந்த 2 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>இந்த சம்பவம் குறித்து காயமடைந்த ஒரு மாணவனின் தந்தை சிப்காட் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் 12 பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தூத்துக்குடி ரூரல் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜசுந்தர் விசாரணை நடத்தி வருகிறார். தூத்துக்குடியில் மாணவர்கள் மோதலில் ஈடுபட்ட இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>