<p><b>மாற்றுத்திறனாளி பெண்ணை தாக்கிய பெண் காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செய்துங்கநல்லூரில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</b><br></p><p>தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அனவரதநல்லூரைச் சேர்ந்தவர் முத்துரத்தினம். இவர் தனது மகன் இறந்தது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த விசாரணை நடந்து வந்த நிலையில் கடந்த மாதம் பெண் காவலர் புஷ்பலதா என்பவர் மாற்றுத்திறனாளி முத்துரத்தினத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.</p><p>இந்த நிலையில் மாற்றுத்திறனாளி பெண் முத்து ரத்தினத்தை தாக்கிய பெண் காவலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட முத்து ரத்தினத்திற்கு உரிய நீதி வழங்க வழியுறுத்தியும், தமிழக அரசின் உத்தரவின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை முழுமையாக வழங்க வலியுறுத்தியும், அரசாங்க உத்தரவின்படி 4 மணி நேரம் மட்டுமே வேலையை வழங்க உத்தரவாதம் வழங்க வலியுறுத்தியும், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.</p><p>இந்த ஆர்ப்பாட்டத்தில் கருங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினர்.</p>