<p><b>தூத்துக்குடி ரோச் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்களிடம் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி வாக்கு சேகரித்தார்.</b></p><p>தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே அரசியல் கட்சிகள் களத்தில் குதித்தனர். கடந்த 25-ம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி, மாவட்ட தேர்தல் அலுவலர் லட்சுமிபதியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.</p><p>அதனைத்தொடர்ந்து நேற்று ( மார்ச் 26 ) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சிவசாமி வேலுமணியை ஆதரித்து தூத்துக்குடியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். மேலும், அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி தூத்துக்குடியின் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரையும் நேரில் சந்தித்து தனக்கான ஆதரவை திரட்டி வந்தார்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2024/03/27/21711531565.jpg" style="width: 100%;"><br></p><p>இந்த நிலையில், அதிமுக மாநில வர்த்தக அணி மாநில செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன் சென்ற அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி, தூத்துக்குடி ரோச் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டு இருந்த பொதுமக்களிடம் தனக்கான ஆதரவை கேட்டு, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2024/03/27/11711531565.jpg" style="width: 100%;"><br></p><p>அதே போல், அங்கு கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த&nbsp; இளைஞர்களிடம் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி, தனக்கான வாக்குகளை சேகரித்தார் சிவசாமி வேலுமணி.</p>