<p><b>விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்ற 3 வருடம் சிறைதண்டனை மற்றும் ரூபாய் 5,000 அபராதமும்&nbsp; விதித்து&nbsp; தீர்ப்பு வழங்கி உள்ளது.</b></p><p>தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு 17 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் காட்டுநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த கரும்பன் மகன் கிருஷ்ணன் (68) என்பவரை விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.&nbsp;</p><p>இவ்வழக்கை அப்போதைய விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மீராள் பானு புலன் விசாரணை செய்து கடந்த 16.07.2021 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.</p><p>இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் இன்று (07.03.2024) குற்றவாளியான கிருஷ்ணன் என்பவருக்கு 3&nbsp; வருட&nbsp; சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.</p><p>இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மீராள் பானு மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலெட்சுமி, விசாரணைக்கு உதவியாக இருந்த பெண் தலைமைகாவலர் சங்கீதா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார்.</p>