<p><b>ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரியில் வீரர் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் முழு உருவ வெண்கல சிலை அமைக்க சட்டமன்றத்தில் சண்முகையா எம்.எல்.ஏ கோரிக்கை வைத்ததையடுத்து, அதனை நிறைவேற்றி தந்த தமிழக அரசிற்கும், சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவிற்கும் வீரர் சுந்தரலிங்கம் வம்சாவழியினர் நன்றி தெரிவித்துள்ளனர்.</b><br></p><p>தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரியில் இந்திய சுதந்திரபோராட்ட மாவீரர் வீரர் சுந்தரலிங்கனார் அவர்களின் மணிமண்டபத்தில் முழு உருவ வெண்கலச்சிலையும் நூலகமும்&nbsp; அமைத்திட, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கைக்கு அப்போது பதில் அளித்த செய்தித் துறை அமைச்சர்&nbsp; சாமிநாதன்,</p><p>"சட்ட மன்ற உறுப்பினர் சண்முகையா குறிப்பிட்டிருக்கிற அந்த நினைவிடத்தை விரைவில் நேரடியாக நாங்கள் பார்வையிடுவதற்கு திட்டமிட்டிருக்கின்றோம். அந்த நினைவிடத்தைப் நேரடியாகப் பார்வையிட்டு, அதற்கேற்ப நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம்" என தெரிவித்தார்.</p><p>இதனையடுத்து, தற்போது கவர்னகிரியில் வீரர் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் குதிரையில் அமர்ந்தவாறு அவரது முழு உருவ வெண்கல சிலை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது.</p><p>இந்த நிலையில், கோரிக்கையை நிறைவேற்றி தந்த தமிழக அரசிற்கும், சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவிற்கும் வீரர் சுந்தரலிங்கம் வம்சாவழியினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.</p>