<p><b>தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் கடும் பாதிப்படைந்தது.&nbsp;</b></p><p>தொடர் கனமழையினால் வீடு மற்றும் உடைமைகளை இழந்த மக்களை மீட்கும் பணியிலும், அவர்களுக்குத் தேவையான உணவு வழங்கும் பணியிலும் ஈடுபடுவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சேவாபாரதியின் தன்னார்வத் தொண்டர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு தூத்துக்குடி ராசி திருமண மண்டபத்தில் நிவாரண முகாம் துவங்கப்பட்டது.&nbsp;</p><p>முதலில் கோவில்பட்டியிலிருந்து உணவு தயார் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா அன்பு இல்லம் மற்றும் முத்தையாபுரம் பாரதிநகர் சேவாலயாவில் வைத்து உணவுப் பொட்டலங்கள் தயார் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.</p><p>தூத்துக்குடியில் 31இடங்களிலும், திருச்செந்தூரில் 12இடங்களிலும் உணவு தயாரிக்கப்பட்டது. தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் வெள்ளம் பாதிக்கப்பட்டு தொடர்பு கொள்ள முடியாமல் இருந்த பல்வேறு பகுதிகளுக்கு மொத்தம் இரண்டு லட்சத்து இருபத்தைந்தாயிரம் உணவுப் பொட்டலங்கள் படகுகள், டிடாக்டர்கள், மற்றும் சரக்கு வாகனங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.</p><p>மாவட்டம் முழுவதும் 75டன் அரிசி விநியோகம் செய்யப்பட்டது. 98 பகுதிகளுக்கு நேரடியாக உணவு மற்றும் நிவாரணபொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி, பருப்பு, பலசரக்கு, காய்கறிகள், குடிநீர், போர்வை, பாய், நாப்கின், மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, தீப்பெட்டி அடங்கிய தொகுப்புகள் 5311குடும்பங்களுக்கு 23.12.2023 அன்று வழங்கப்பட்டுள்ளது.</p><p>இந்த சேவைப்பணியில் RSS சேவாபாரதியின் 1170 தன்னார்வத் தொண்டர்கள் பங்கேற்றனர். 4 படகுகள், 7 போயா படகுகள், 12 டிராக்டர்கள், 4 தண்ணீர்டிராக்டர்கள், 25 சரக்குவாகனங்கள், 3 ஆம்புலன்ஸ்கள் உபயோகப்படுத்தப்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் கர்ப்பிணி பெண்கள், வயோதிகர்கள் உட்பட 35பேர் மீட்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>இந்த சேவைப்பணிகளைப் பார்வையிட வருகைதந்த Zoho தலைமை நிர்வாக இயக்குனர் பத்மஸ்ரீ வேம்பு அவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் சேவாபாரதி பொறுப்பாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.</p><p>இம்முகாமிற்கு கன்னியாகுமரி, மதுரை, இராமேஸ்வரம், தஞ்சை, திருச்சி, திருப்பூர், கோவை பகுதிகளிலிருந்தும் மற்றும் சென்னையிலிருந்து 35 லாரிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கிய அனைவருக்கும் சேவாபாரதியின் சார்பில் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது, வீடுகளைப் புனரமைத்துத் தரவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. என சேவாபாரதியின் பொறுப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்</p>