<p><b>கழுகுமலையில் கடனை திருப்பிக் கேட்டு மிரட்டியதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.</b></p><p>தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள கரடிகுளம் சின்னகாலனி பகுதியை சேர்ந்தவர் கதிரவன் (வயது 36). கூலி தொழிலாளியான இவருக்கு பேச்சியம்மாள் (34) என்ற மனைவியும், துர்க்கா (12), கீர்த்தி (9), கீர்த்தனா (9) ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.</p><p>கதிரவன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கழுகுமலை ஆறுமுகம் நகரைச் சேர்ந்த நடராஜன் (60) என்பவரிடம் ரூ.5 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் கடந்த 2½ மாதத்திற்கு முன்பு கதிரவன் நடராஜனிடம் ரூ.7 ஆயிரம் கொடுத்து கணக்கை முடித்துள்ளார்.</p><p>எனினும் கடந்த 1-ந் தேதி மாலையில் நடராஜன் மீண்டும் கதிரவனிடம் தனக்கு தர வேண்டிய பணத்தை வட்டியுடன் சேர்த்து தரவேண்டும் என்று கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது.</p><p>இதனால் மனவேதனை அடைந்த கதிரவன் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.</p><p>இதுகுறித்து தகவல் அறிந்த கழுகுமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கதிரவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>மேலும் கந்துவட்டி கேட்டு மிரட்டியதால் தான் தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக கதிரவனின் மனைவி பேச்சியம்மாள் கழுகுமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.</p><p>அதன்பேரில், கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.</p><p>நடராஜன் ஏற்கனவே கொலை வழக்கில் பாளையங்கோட்டை சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வருகிறார். தற்போது பரோலில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>