<p><b>தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய பேருந்து நிலைய வாளகத்தில் வைத்து நேற்று (24.03.2022) மாலை புதுக்கோட்டை கீழகூட்டுடன்காடு பகுதியைச் சேர்ந்த நெல்லையப்பன் மகன் முத்துபாண்டி (45) என்பவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர்.</b></p><p>இதுகுறித்து தகவலறிந்த வடபாகம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.</p><p>இச்சம்பவம் தொடர்பாக திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ்குமார் மற்றும்&nbsp; தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ரபி சுஜின்ஜோஸ் அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவராஜா மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து எதிரியை விரைந்து கைது செய்ய உத்தரவிடப்பட்டது.</p><p>மேற்படி உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முன்விரோதம் காரணமாக நேற்று முத்துப்பாண்டியை, புதுக்கோட்டை கீழகூட்டுடன்காடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் லட்சுமணன் (23)&nbsp; மற்றும் தூத்துக்குடி கேடிசி நகரைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் கருப்பசாமி (27), புதுக்கோட்டை வாட்டர் டேங்க் தெருவைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் செல்வகணேஷ் என்ற வடை (22)&nbsp; மற்றும் ஒருவருடன் சேர்ந்து சம்பவ இடத்தில் வைத்து முத்துப்பாண்டியை அரிவாளால் வெட்டி கொலை செய்ததுடன் அங்கு இருந்த அவரது மனைவி மற்றும் முத்துப்பாண்டியின் சகோதரர் செல்வக்குமார் என்பவரையும் கொலை மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாணை மேற்கொண்டு 1) லட்சுமணன், 2) கருப்பசாமி மற்றும் 3) செல்வகணேஷ் என்ற வடை ஆகியோரை போலீசார் இன்று கைது செய்தனர்.</p><p>மேலும் கொலையுண்ட முத்துப்பாண்டி மீது தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகளும், புதுக்கோட்டை காவல் நிலையத்தில் கஞ்சா, கொலை முயற்சி வழக்கு உட்பட 6 வழக்குகளும், சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு உட்பட மொத்தம் 11 வழக்குகளும்,</p><p>கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட லட்சுமணன் மீது&nbsp; புதுக்கோட்டை காவல் நிலையத்தில் கஞ்சா, கொலை முயற்சி வழக்குகள் உட்பட 6 வழக்குகளும், சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும், ஆத்தூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 2 வழக்குகளும், குரும்பூர் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கு உட்பட மொத்தம் 11 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>