<p dir="ltr"><span style="font-size:16px" ;=""><b>ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மீதான வழக்குகளை&nbsp;ரத்து செய்வதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.</b></span><br></p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">தமிழகத்தில் கொரோனா தொற்று 2வது அலை தீவிரமாக பரவியிருந்த நேரத்தில் மருத்துவமனைகளில் நிலவிய ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி பணிகளுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து&nbsp; தமிழக அரசும் அனுமதி வழங்கியதை அடுத்து, கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு, ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த மே 31ம் தேதி ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கி நடைபெற்றது.&nbsp;</span></p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன் தென்மாவட்டங்களின் உள்ள மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்டது.&nbsp; ஆக்சிஜன் தயாரிப்பு பணிகளுக்காக உச்ச நீதிமன்றம் அளித்த அனுமதி காலம் கடந்த ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைந்ததால், அந்த அனுமதியை மேலும் நீடிக்கக் கோரி, தூத்துக்குடி சிப்காட் மற்றும் புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்த ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.&nbsp;</span></p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஊழியர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கவும், அந்த வழக்கை ரத்துச் செய்யக் கோரியும்,&nbsp; ஸ்டெர்லைட் துணைத் தலைவர் உள்பட பலர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.&nbsp;</span></p><p> </p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">கொரோனா மூன்றாவது அலை பரவக்கூடும் என்ற அச்சம் காரணமாக, பொதுமக்கள் உயிரிழப்பை தடுக்கும் பொது நோக்கத்துடன்தான் ஆக்சிஜன் உற்பத்தியை நீடிப்பு&nbsp; செய்ய கோரி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.&nbsp;</span></p><p dir="ltr"><span style="font-size:16px" ;=""> இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டெர்லைட் ஊழியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.</span></p>